உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில், மூன்று மாதக் குழந்தையை ஒரு குரங்கு சுமார் இரண்டு மணி நேரம் பிணையாகப் பிடித்து வைத்திருந்த நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. சர்தாவால் நகரில் உள்ள ஒரு வீட்டில் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தபோது, கூரை வழியாக உள்ளே நுழைந்த பெண் குரங்கு ஒன்று, குழந்தையைத் தூக்கி வைத்துக்கொண்டு கொஞ்சத் தொடங்கியுள்ளது.

இதைப் பார்த்த தாய் அலறவே, அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து குரங்கை விரட்ட முயன்றனர். ஆனால், குரங்கு ஆக்ரோஷமாக மாறி எவரையும் அருகில் நெருங்க விடாமல் தடுத்துள்ளது. ​தகவலறிந்து வந்த விலங்கு மீட்பு வீரர் சன்னி சோப்ரா மற்றும் அவரது குழுவினர், உணவு கொடுத்துக் குரங்கின் கவனத்தைத் திசைதிருப்ப முயன்றும் பலன் கிடைக்கவில்லை. இறுதியில், ஒரு நுணுக்கமான உபாயத்தைக் கையாண்ட அவர்கள், மொபைல் போனில் விலங்குகளின் வீடியோக்களைக் குரங்கிற்குக் காட்டியுள்ளனர்.

குரங்கு அந்த வீடியோக்களைப் பார்ப்பதில் மும்முரமாக இருந்த அந்தச் சில நொடிகளைப் பயன்படுத்தி, குழந்தையைப் பத்திரமாக மீட்டனர். விசாரணையில், அந்தக் குரங்கின் குட்டி ஆறு நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதால், இந்தக் குழந்தையைத் தன் குட்டியாக நினைத்துக் குரங்கு பாசம் காட்டியது தெரியவந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக குழந்தைக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை.