சேலம் மாவட்டம் மூங்கில் பாடி பகுதியை சேர்ந்தவர் அபிமன்னன். கூலி தொழிலாளியான இவர் கடந்த 12ஆம் தேதி குடிபோதையில் பறவை காடு பகுதியில் நின்று கொண்டிருந்த கருணாநிதி என்பவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் கோபமடைந்த கருணாநிதி வெந்நீரை எடுத்து அபிமன்னன் மீது ஊற்றியுள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த அபிமன்னன் கை வெந்ததை  கண்டுகொள்ளாது சுற்றி திரிந்துள்ளார்.

வெந்த கைக்கு மருந்து போடாததால் கை அழுகி வலி ஏற்பட தொடங்கியுள்ளது. இது குறித்து தனது தாய் பழனியம்மாளிடம் அபிமன்னன் கூற மகனை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி அபிமன்னன் நேற்று இரவு உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் வெந்நீரை ஊற்றிய கருணாநிதியை தேடி வருகின்றனர்.