நைஜீரியாவில் அரசுக்கு எதிராக பயங்கரவாத இயக்கமான போகோஹராம் அடிக்கடி தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அந்நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள கெய்டாம் மாவட்டத்தின் குரோகயேயா கிராமத்திற்குள் பயங்கரவாதிகள் புகுந்து துப்பாக்கிச் சூடு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்காக ஊர்வலமாக எடுத்துச் சென்ற போது பயங்கரவாதிகளின் கன்னிவெடி தாக்குதலில் சிக்கி உள்ளனர். இதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறாக பயங்கரவாதிகளால் அந்த கிராமத்தை சேர்ந்த 37 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுபோன்ற தாக்குதல் அடிக்கடி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.