உதயப்பூர் அம்பாமாதா காவல் நிலைய அதிகாரி முகேஷ் சோனி உணவகம் ஒன்றிற்குள் புகுந்து அங்கிருந்த இளைஞர்களைக் கொடூரமாகத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், அதிகாரி சோனி மற்றும் அவருடன் வந்த காவலர்கள் முதலில் மூடியிருந்த உணவகக் கதவைத் தட்டுகின்றனர், பின்னர் உள்ளே நுழைந்ததும் அங்கிருந்த இளைஞர்களைக் கன்னத்தில் அறைந்தும், கால்களால் உதைத்தும் கடுமையாகத் தாக்குவது பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, காவல்துறையினரின் அத்துமீறல் குறித்து பொதுமக்கள் மத்தியில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ள அதிகாரி முகேஷ் சோனி, இந்த வீடியோ சுமார் 10 மாதங்களுக்கு முந்தைய பழைய வீடியோ என்று கூறியுள்ளார்.

“>

மேலும் நள்ளிரவு 2 மணி அளவில் ஒரு உணவகத்தின் ஷட்டர் மூடப்பட்டு உள்ளே 10 இளைஞர்கள் இருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரிலேயே தாம் அங்கு சென்றதாகவும், நீண்ட நேரம் கதவைத் தட்டியும் அவர்கள் திறக்காததால் பின்புற வாசல் வழியாக உள்ளே நுழைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் அந்த இளைஞர்கள் யார், அவர்கள் அங்கு என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பது குறித்த தெளிவான விவரங்கள் இன்னும் வெளிவராத நிலையில், காவல்துறை அதிகாரியின் இந்த வன்முறைச் செயல் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.