உத்தரபிரதேசம் கான்பூரில் கடந்த 22ம் தேதி இரவு டபௌலி பகுதியில் இருந்து மாருதி கார் ஒன்று திருடப்பட்டது. இதுகுறித்த புகாரின்படி விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் மே.23 காரை திருடிய வழக்கில் 3 பேரை கைது செய்தனர். இவ்வாறு கார் திருட்டில் ஈடுபட்டவர்கள் பழைய கான்பூரின் ராணி காட் பகுதியை சேர்ந்த சத்யம் குமார், கத்ரியன் பூர்வா பகுதியை சேர்ந்த அமன் கௌதம், பிரம் நகரை சேர்ந்த அமித் வர்மா என தெரிகிறது. இதில் சத்யம் குமார், அமன் கௌதம் இருவரும் பி.டெக் மாணவர்கள் என்று தெரியவந்து உள்ளது. 3-து நபரான அமித் வர்மா துப்புரவு பணி செய்பவர். இவர்கள் 3 பேரும் பீடா கடையில் சந்தித்து பின் நெருங்கிய நண்பர்களாகியுள்ளனர்.

3 பேரும் விரைவில் பணக்காரர்கள் ஆக வேண்டும் என நினைத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளனர். இவர்கள் முதல் முறையாக காரை திருட முயற்சி செய்துள்ளனர். டபௌலி பகுதியில் காரை திருடச் சென்றபோது தான் 3 பேருக்கும் கார் ஓட்டத் தெரியாது என்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த 3 பேரும் செய்வதறியாமல் திகைத்து உள்ளனர். அதன்பின் காரை திருடி விற்றுவிடலாம் என முடிவுசெய்துள்ளனர். அந்த வகையில் காரை தள்ளிக்கொண்டு சுமார் 17 கி.மீ சென்றுள்ளனர். அங்கு உள்ள ஒரு கராஜில் காரை விற்பனை செய்வதற்காக நிறுத்தியபோது தான் காவல்துறையினரிடம் சிக்கிக்கொண்டனர்.