
ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபி பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு நேற்று இளம் பெண்ணும் ஒரு வாலிபரும் சிகிச்சைக்காக சென்றுள்ளனர். அப்போது அந்தப் பெண்ணை பரிசோதித்த டாக்டர் அந்த பெண்ணுக்கு பிரசவம் ஆகி அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்படுவதை அறிந்தார். அதோடு அவர்கள் இருவரும் கணவன் மனைவிதானா என்ற சந்தேகம் டாக்டருக்கு எழுந்ததால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அந்த தகவலின் படி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரியவந்தது. அதாவது திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு 20 வயது வாலிபர் ஒருவர் தன்னுடைய தாய் மற்றும் ஒரு 19 வயது இளம் பெண்ணுடன் கோபி பகுதிக்கு குடி வந்தார். இதில் அந்த இளம் பெண் கல்லூரியில் படித்து வந்த நிலையில் இருவரும் திருமணம் ஆகாமலேயே ஒரு வீட்டில் குடி வந்து கணவன் மனைவி போல் வாழ்ந்துள்ளனர். இதில் மாணவி திடீரென கர்ப்பம் அடைந்ததால் அது அவருடைய பெற்றோருக்கு தெரியக்கூடாது என்பதால் பின்னர் திருப்பூருக்கு வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாணவிக்கு பிரசவ வலி அதிகமான நிலையில் youtube பார்த்து வாலிபர் வீட்டில் வைத்தே பிரசவம் பார்த்தார். அப்போது மாணவிக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் ரத்தப்போக்கு அதிக அளவில் வெளியேறியது. இதனால் அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் பின்னர் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது வாலிபரின் தாய் குழந்தையை கவனித்து வந்தது தெரிய வந்த நிலையில் அங்கிருந்து தொப்புள் கொடியையும் கைப்பற்றினர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது