தமிழ்நாடு முழுவதும் சத்துணவு திட்டத்தில் பயன் பெற்று வரும் குழந்தைகளுக்கு காமராஜர், அண்ணா புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி செல்வி ஜெ. ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று இனிப்பு பொங்கல் வழங்கப்படுவது போல இனிவரும் காலங்களில் மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி அவர்களின் பிறந்தநாள் அன்றும் இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என்று கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை கொண்டாடும் விதமாக புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில், கருணாநிதி பிறந்தநாள் அன்று அங்கன்வாடி, சத்துணவு மையங்களில் 2 முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இனிப்பு பொங்கல் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், ஜெ., ஆகியோரின் பிறந்தநாளில் ஏற்கனவே இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டு வருகிறது.