கோவை கோவப்புதூர் பகுதியில், கதவுகள் இல்லாத தனியார் பஸ்ஸில் பயணித்த 66 வயது மூதாட்டி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிறன்று காலை ஐயப்பன்கோவில் நிறுத்தத்தில் பஸ்ஸில் ஏறிய காமாட்சி என்ற மூதாட்டி, காலி இருக்கையைத் தேடி பஸ்ஸின் முன்பகுதிக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது டிரைவர் பஸ்ஸை வேகமாக எடுத்ததால், நிலைதடுமாறிய மூதாட்டி கதவுகள் இல்லாத பஸ்ஸின் முன்பக்கப் படிக்கட்டு வழியாகத் தவறி கீழே விழுந்தார்.

​பலத்த காயமடைந்த அவரை அதே பஸ்ஸில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும், வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பஸ்ஸினுள் இருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீசார், கவனக்குறைவாகப் பஸ்ஸை இயக்கிய டிரைவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். “கதவுகள் இல்லாத பஸ்ஸ்கள் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தாக முடிந்துள்ளன” எனப் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.