கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஒடிசாவை சேர்ந்த அணில், விஷ்ணு, ரமேஷ், ஜார்கண்டை சேர்ந்த மணிஷ், சலான் ஆகியோர் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தனர். இவர்கள் 5 பேரும் சொந்த ஊருக்கு செல்வதற்காக ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு புறப்பட்டனர். முன்னதாக ஓசூரில் இருந்து கார் மூலம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அந்த காரை அக்பர் ஹாசன் என்பவர் ஓட்டி சென்றார்.

இந்நிலையில் பர்கூர் தீயணைப்பு நிலையம் எதிரே சென்றபோது முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது கார் மோதியது. மேலும் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பு சுவரில் மோதி சுக்குநூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆறு பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.