கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அண்மையில் உடல் நலக்குறைவால் திருமகன் ஈவேரா உயிரிழந்ததை அடுத்து தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்தது. இந்தத் தொகுதியின் வேட்பு மனு ஜனவரி 31-ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 7-ஆம் தேதி நிறைவு பெற்றது. திமுக தலைமையிலான மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக மறைந்த திருமகன் ஈவேராவின் தந்தையும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

அதன்பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக அதிமுகவின் கே.எஸ் தென்னரசு அறிவிக்கப்பட்டார். தேசிய முற்போக்கு திராவிட கழகம் வேட்பாளராக ஆனந்தும், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேகனா நவநீதனும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர். சுயேச்சை உள்ளிட்ட வேட்பாளர்கள் சேர்த்து மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவுக்காக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டது. இதில் 32 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு, துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். வாக்குப்பதிவு பணியில் 1206 ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில் தேமுதிக கட்சியின் வேட்பாளர் ஆனந்த் அக்ரகாரம் பகுதியில் உள்ள மதராசபள்ளியில் வாக்களிப்பதற்காக சென்றார். அப்போது கட்சியின் துண்டு மற்றும் வேட்டி போன்றவற்றை ஆனந்த் அணிந்திருந்ததால் தேர்தல் அதிகாரி கட்சி துண்டு மற்றும் வேட்டியோடு வாக்களிக்க செல்லக்கூடாது என வேட்பாளர் ஆனந்திடம் கூறினார். இதனால் தேர்தல் அதிகாரி மற்றும் வேட்பாளர் ஆனந்துக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தேர்தல் நடைபெறும் இடத்துக்குள் எந்த ஒரு கட்சி அடையாளத்துடனும் வரக்கூடாது என தேர்தல் அதிகாரி கூறினார். இருப்பினும் ஆனந்த் மற்றும் தொண்டர்கள் தேர்தல் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு ஆனந்த் தன்னுடைய துண்டு மற்றும் உடையை மாற்றிக்கொண்டு வாக்களிப்பதற்கு வந்தார். இதனால்அ அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.