உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபித் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 30) நடைபெற்ற ஒரு திகிலூட்டும் சாலை விபத்து, அப்பகுதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த சம்பவத்தில், அதிக அளவில் வைக்கோல் ஏற்றிச் சென்ற லாரி, திடீரென அச்சு உடைந்து, சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரின் மீது கவிழ்ந்து விழுந்தது. இந்த அதிர்ச்சியூட்டும் காட்சி, அருகிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

காவல் துறையின் தகவலின்படி, காரில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் மற்றும் 2 பெரியவர்கள், சில வினாடிகள் முன் வாகனத்திலிருந்து இறங்கியதனால், பெரும் விபத்திலிருந்து  உயிர்தப்பினர். காருக்குக் கிட்டத்தட்ட முழுமையான சேதம் ஏற்பட்டது.

 

இந்த சம்பவம் குறித்த காணொளி, @pixelsabhi என்ற பயனர் வழியாக சமூக வலைதளமான X-ல் பதிவேற்றப்பட்டுள்ளது. காணொளியில், லாரி மிகக் கூடுதலாக வைக்கோல் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளதையும், அதன் தாக்கம் காரை சில வினாடிகளில் நொறுக்கி உடைத்ததையும் தெளிவாகக் காணலாம்.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எந்தவிதமான புகாரும் பதிவு செய்யப்படவில்லை என பிலிபித் காவல் நிலையப் பொறுப்பாளர் பவன் பாண்டே தெரிவித்தார். மேலும், லாரியின் அச்சு உடைந்ததையே விபத்துக்கான காரணம் என மாவட்ட முக்கிய போக்குவரத்து அலுவலர் (ஆர்டிஓ) வீரேந்திர சிங் உறுதிப்படுத்தினார். விபத்து நடைபெற்ற இடத்தில் தற்போது லாரி சாலையோரத்தில் நிறுத்தப்பட்ட நிலையில் காணப்படுகிறது. மேலும் இதுகுறித்து விசாரணை நடைபெறுகிறது.