ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் ஆனது தேசிய பென்ஷன் திட்ட பயனர்களுக்கான புதிய விதிமுறையை அறிவித்துள்ளது. அதன்படி இனி ஓய்வூதிய கணக்கில் உள் நுழைவதற்கான செயல்முறை மாற்றப்பட்டுள்ளது. இதுவரை பின்பற்றப்பட்டு வந்த பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல் அடிப்படையிலான உள் நுழைவு செயல்முறை ஆதார் அடிப்படையிலான உள்நுழைவு அங்கீகார முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இது தேசிய பென்ஷன் திட்டத்தில் ரெக்கார்ட் கீப்பிங் ஏஜென்சி அமைப்பு மூலமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகளின் படி ஓய்வூதிய கணக்கில் உள்நுழைவதற்கான செயல்முறை இரண்டு கட்ட ஓடிபி சரிபார்ப்பு முறைக்கு உட்படுத்தப்படும்.

தேசிய பென்ஷன் திட்டத்தில் கணக்கு வைத்துள்ளவர்கள் முதலில் https://enps.nsdl.com/eNPS/NationalPensionSystem.html என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று அதில் தோன்றும் பக்கத்தில்  Login with PRAIN / IPIN → PRAIN / IPIN என்பதை கிளிக் செய்ய வேண்டும். பிறகு தோன்றும் லாகின் பக்கத்தில் பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்ட உள்நுழைய வேண்டும். அதன் பிறகு கேப்சா சரிபார்ப்பை முடித்த பிறகு தோன்றும் பக்கத்தில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும் ஓடிபி எண் சரியாக உள்ளிட்டால் கணக்கை திறக்கலாம். இந்த முறையானது பயனர்களின் கணக்கை பாதுகாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய செயல்முறை இன்று ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.