சமூக ஊடகங்களில் வெளியான ஒரு பயங்கரமான வீடியோ இப்போது வேகமாகப் பரவி வருகிறது. இதில், ஒரு பெண் பயணிக்கும் ரயிலில் ஆபத்தான வித்தை (ஸ்டண்ட்) செய்ய முயன்று தோல்வியடைந்து, அதன் விளைவாக பெரும் விபத்தை சந்திக்கிறார். இந்தக் காட்சியைப் பார்த்த ரயிலில் இருந்தவர்களும், சமூக ஊடகங்களில் பார்த்தவர்களும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

வைரலான இந்த வீடியோவில், ஒரு ரயில் அதிவேகத்தில் செல்கிறது. ஆனால், அந்த வேகத்தில் ஒரு பெண் ரயிலின் மேற்கூரையில் ஏற முயற்சிக்கிறார். அவர் ஏறுவதைப் பார்த்த ரயிலின் கதவு அருகே நின்ற ஒரு பயணி, இந்தக் காட்சியை தனது மொபைல் போனில் பதிவு செய்யத் தொடங்குகிறார். ஆனால், அந்தப் பெண் மேற்கூரையில் ஏறி, கைகளை உயர்த்தி வீரமாக நிற்க முயல்கிறார். திடீரென, ரயிலின் மேல் உள்ள பேன்டோகிராஃப் (ரயிலை இயக்க உயர் மின்சாரத்தை எடுக்கும் கருவி) உயர் மின்னழுத்த கம்பிகளைத் தொட, அவர் தவறி விழுந்து விடுகிறார். இதனால், ரயில் மேற்கூரையில் பயங்கரமான வெடிப்பு ஏற்படுகிறது. இந்தக் காட்சியைப் பதிவு செய்தவர் கூட இந்த பயமுறுத்தும் காட்சியைப் பார்க்க முடியாமல் திகைத்து நிற்கிறார்.

இதுபோன்ற ஆபத்தான வித்தைகள் முதல் முறையாக நடப்பவை அல்ல. சமூக ஊடகங்களில் இதற்கு முன்பும் இதேபோல் பல வீடியோக்கள் பரவியுள்ளன, சிலருக்கு இது உயிரிழப்புக்கு வழிவகுத்திருக்கிறது. சிலர் ரயில் தண்டவாளங்களில் படுத்து ரயில் மேலே செல்வதை பதிவு செய்கிறார்கள், மற்றவர்கள் ரயில் வரும்போது செல்ஃபி எடுக்க முயல்கிறார்கள். இவை அனைத்தும் வெறும் ‘லைக்குகள்’ மற்றும் ‘பாலோயர்களுக்காக’ செய்யப்படுகின்றன. இந்த வீடியோவை @bottomless_clip என்ற கணக்கில் எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டு, லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர். இந்த வீடியோ மக்களிடையே பல்வேறு விவாதங்களை உருவாக்கியுள்ளது.