
சென்னை எழும்பூரில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஓபிஎஸ், நாம் எல்லோருக்கும் தெய்வமாக விளங்கும் ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட நிரந்தர பொதுச் செயலாளர் பதவியில் அமர பழனிச்சாமிக்கு எப்படி தான் மனம் வந்தது என்று தெரியவில்லை. அதிமுகவில் ரத்து செய்ய முடியாத விதியை அவர் ரத்து செய்துள்ளார். தன்னாட்சி அதிகாரம் பெற்ற தேர்தல் ஆணையம் உரிய முடிவெடுக்கும். கட்சிக்கு என்று சட்ட விதிகளை உருவாக்கி பதிவு செய்த பிறகு விதிகளில் இருந்து மாறுபட்டால் நடவடிக்கை எடுக்கவும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு உண்டு.
கடந்த மூன்று ஆண்டுகளாக கட்சியை ஒன்றிணைக்க தொடர்ந்து போராடி வருகின்றேன். அனைவரும் ஒன்றிணையக்கூடிய காலம் வெகு தூரத்தில் இல்லை. வரும் காலம் தேர்தல் காலம். சில ரகசியங்கள் நிறைந்திருக்கிறது. அதன்படி செயல்பட்டு 2026 ஆம் ஆண்டில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சியை அமைப்போம். அனைவரும் ஒன்றிணைந்தால்தான் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற முடியும் என தொண்டர்களும் மக்களும் கருதுகிறார்கள். எனவே ஒருமித்த கருத்தோடு இணைய வேண்டும். அதற்கு சிலர் தடையாக உள்ளனர். கட்சிக்கு ஒற்றை தலைமை தான் வேண்டும் என்று ஒற்றை தலைமைக்கு வந்ததும் தேர்தலை சந்திக்க திறனற்ற கட்சியாக தான் அதிமுக உள்ளது என ஓபிஎஸ் விமர்சித்துள்ளார்.