குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில், 11 ஆசிய சிங்கங்கள் ஒன்றாகச் சேர்ந்து சாலையைக் கடந்த ஆச்சரியமான சம்பவம் நடந்துள்ளது. அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டி ஒருவர் இதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர, அது தற்போது வைரலாகி வருகிறது. கூட்டமாக வந்த சிங்கங்களைப் பார்த்த பயணிகள் முதலில் சற்று அச்சமடைந்தாலும், அந்த கம்பீரமான காட்சியைப் பார்த்து வியந்து போயினர்.

​தகவல் அறிந்து விரைந்து வந்த வனத்துறையினர், டிராபிக் போலீஸார் போலச் செயல்பட்டுச் சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்தினர். சிங்கங்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் அவை பாதுகாப்பாகக் காட்டை நோக்கிச் செல்ல வழிவகை செய்தனர். வனத்துறையினரின் இந்தச் சமயோசித புத்தியையும், மனிதர்களுக்கும் சிங்கங்களுக்கும் இடையே ஏற்பட்ட இந்த இணக்கமான சூழலையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.