உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் யாத்திரை பாதையில், குதிரை சவாரி செய்த பெண் ஒருவர் உள்ளூர் குதிரை ஓட்டுநரிடம், “நான் யார் என்று உனக்குத் தெரியாது; ஒரே ஒரு போன் கால் செய்தால் நீ ஜெயிலுக்குப் போயிடுவ” என்று ஆக்ரோஷமாக மிரட்டல் விடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சவாரியின் போது குதிரையின் மீது கட்டப்பட்டிருந்த சிலிண்டர் தன் காலில் பட்டதாகக் கூறி, அந்தப் பெண் இந்தியில் கத்தி கூச்சலிட்டுள்ளார். அவர் உள்ளூர் எஸ்பி-க்கு போன் செய்யப் போவதாக மிரட்டிய போதும், அந்த குதிரை ஓட்டுநர் பயத்துடன் அமைதியாகத் தலையசைத்துக் கேட்டுக்கொண்டே இருந்துள்ளார். இந்த வீடியோ எக்ஸ் (X) தளம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாய் பரவி நெட்டிசன்கள் மத்தியில் கடும் கண்டனங்களை குவித்து வருகிறது.

புனிதப் பயணங்களின் போது பக்தி, அமைதி மற்றும் பணிவு முக்கியம் என்றும், இதுபோன்ற அகங்கார குணம் கொண்டவர்கள் ஏன் கேதார்நாத் போன்ற ஆன்மீகத் தலங்களுக்கு வருகிறார்கள் என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதே நேரத்தில், குதிரை ஓட்டுநர்கள் சில நேரங்களில் பயணிகளின் பாதுகாப்பில் அலட்சியமாகச் செயல்படுவதாகவும், இதனால் காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஒரு சிலர் அந்தப் பெண்ணுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

“>

 

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, புனித யாத்திரைகள் தற்காலத்தில் வெறும் சமூக ஊடக ரீல்ஸ் மற்றும் புகைப்படங்களுக்கான சுற்றுலாத் தலங்களாக மாறி வருவதாகப் பெரிய விவாதம் எழுந்துள்ளது. இந்த வைரல் வீடியோ குறித்து உத்தரகண்ட் போலீசாரோ அல்லது கோவில் நிர்வாகமோ இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை.