ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மருதூர் கிராமத்தில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீதா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நயினார் கோவில் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் கீதாவிற்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் செவிலியராக வேலை பார்க்கும் ஒருவர் கீதாவிடம் குடும்ப கட்டுப்பாடு செய்யுமாறு கூறி வந்தார். அதன்படி கீதாவிற்கு அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அப்போது அளவுக்கு அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டதால் அவசர அவசரமாக கீதாவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கீதா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை அறிந்த கீதாவின் உறவினர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அளித்த தவறான சிகிச்சையால் தான் கீதா உயிரிழந்ததாக குற்றம் சாட்டி உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.