மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான திரைப்படம் மாமன்னன். கடந்த வாரம் வெளியான இந்த திரைப்படம் தமிழகம் முழுவதும் வசூலை வாரி குவித்து வருகிறது. இந்த படத்தில் எம்எல்ஏ கதாபாத்திரத்தில் வடிவேலுவும் அவருடைய மகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்தனர். இது ஒருபுறம் இருக்க மற்றொருபுறம் இந்த திரைப்படம் முன்னாள் சபாநாயகர் தனபாலின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாக பலரும் கூறி வருகின்றனர். இந்த படத்தில் வடிவேலுவை சாதி ரீதியாக ஒடுக்கும் மாவட்டச் செயலாளர் கதாபாத்திரத்தில் பகத் பாஸில் நடித்திருப்பார். இதனிடையே தனபால் எம்எல்ஏவாக இருந்தபோது சேலத்தில் மாவட்ட செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தார். எனவே இந்த திரைப்படத்துடன் எடப்பாடியை இணைத்தும் கருத்துக்களும் விமர்சனங்களும் பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில்அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். நாட்டில் அனைத்து பொருட்களின் விலையும் 70 சதவிகிதம் உயர்ந்து விட்டதாக இபிஎஸ் தெரிவித்தார். பின்னர், மக்களின் பிரச்னை பற்றி முதல்வருக்கு கவலை இல்லை. மாமன்னன் படம் ஓடினால் என்ன ஓடாமல் இருந்தால் என்ன? நாட்டு மக்கள் பசிக்கு அந்த படமா வயிறார சோறு போட போகிறது  செய்தியாளர்கள் கேட்கும் கேள்வி இதுதானா? என்று விமர்சித்தார்.