
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் கிட்டத்தட்ட 77 அரசு தொடக்கப் பள்ளியில் உள்ளது. இங்கு காட்டினேந்தல் என்ற பகுதியில் அரசு பள்ளி ஒன்றும் உள்ள அரசு பள்ளியில் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக ஒரே ஒரு மாணவன் மட்டுமே படித்து வருகிறார். புதிய மாணவர் சேர்க்கை என எதுவும் இல்லை.
பள்ளியில் பயிலும் அந்த ஒரு மாணவன் நான்காம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பிற்கு தேர்வாகியுள்ளார். அந்த ஒரு மாணவனுக்கு பாடம் எடுப்பதற்காக ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பள்ளியில் உள்ளார். அவரும் குஞ்சங்குளம் பள்ளியிலிருந்த மாற்றுப் பணி ஆசிரியர். இந்த ஒரு மாணவனுக்கு காலை உணவு பிள்ளையாரேந்தல் பள்ளியிலிருந்து மதிய உணவு குஞ்சங்குளம் பள்ளியிலிருந்தும் வரும்.
ஐந்து வருடங்களாகவே அட்மிஷன் இல்லை. இருப்பினும் இந்த பள்ளிக்கு புதிதாக சமையலறை கட்டிடம், புதிய கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் பள்ளிகள் திறக்கும் போது பள்ளிகளை சுத்தம் செய்ய வேண்டும் என்பது கட்டாயம். ஆனால் இந்த பள்ளியில் புதிய மாணவர் சேர்க்கை ஏதும் நடைபெறவில்லை என்பதால் பள்ளியை கூட சுத்தம் செய்யவில்லை.
இதே போன்று தளிர்மருங்கூர் என்ற கிராமத்திலும் ஒரு மாணவன் மட்டுமே படித்து வருகிறார். அங்கும் ஐந்து வருடங்களுக்கு மேல் அட்மிஷன் எதுவும் புதிதாக வரவில்லை. இது பற்றி அந்த பகுதி கிராம மக்களிடம் கேட்டபோது இந்த கிராமங்களை சுற்றி நிறைய தனியார் பள்ளிகள் உள்ளது.
அந்த பள்ளிகளில் வாகன வசதிகளும் மற்ற எல்லா வசதிகளும் உள்ளதால் அனைவரும் தனியார் பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பதிலே விருப்பம் காட்டுகின்றனர். இதுகுறித்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலரிடம் கேட்டபோது, நாங்கள் மாணவர் சேர்க்கைக்காக தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறோம்.
இந்த வருடம் மூன்று மாணவர் சேர்க்க அனுமதி கேட்டுள்ளோம். மேலும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கல்வி அலுவலர் கூறினார்.