உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஃபதேபூர் சிக்ரி பகுதியில், சுமார் 30 அடி ஆழமுள்ள குளத்தில் இளம்பெண் ஒருவர் எதிர்பாராதவிதமாக விழுந்து நீரில் மூழ்கிக் கொண்டிருந்தார். குளம் மிகவும் ஆழமாக இருந்ததன் காரணமாக, அங்கிருந்த உள்ளூர் இளைஞர்கள் யாரும் தண்ணீரில் இறங்கி அந்தப் பெண்ணைக் காப்பாற்ற துணியாமல் கரையில் நின்றபடி சத்தம்போட்டுக் கொண்டிருந்தனர்.

அந்தச் சமயத்தில், ஃபதேபூர் சிக்ரி காவல் நிலையத்தைச் சேர்ந்த பயிற்சி காவலர் (Recruit Constable) தீபக் சோலங்கி, தனது ரோந்து பைக்கில் அந்தப் பகுதியைக் கடந்து சென்று கொண்டிருந்தார். மக்களின் அலறல் சத்தத்தைக் கேட்டு உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த அவர், குளத்தில் பெண் ஒருவர் மூழ்கிக் கொண்டிருப்பதை கவனித்தார்.

​ஒரு நொடி கூட நேரத்தை வீணடிக்க விரும்பாத காவலர் தீபக் சோலங்கி, உடனடியாக தனது காலணிகளை (Boots) மட்டும் கழற்றி எறிந்துவிட்டு, அணிந்திருந்த போலீஸ் யூனிஃபார்முடனேயே அந்த 30 அடி ஆழ குளத்தில் குதித்தார். தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த இளம்பெண்ணை பத்திரமாக மீட்டு கரைக்குக் கொண்டு வந்தார். குளத்தில் இருந்து மீட்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து, தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழலில் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் இளம்பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய காவலர் தீபக் சோலங்கியைப் பாராட்டி, ஆக்ரா போலீஸ் கமிஷனர் தீபக்குமார் ஐபிஎஸ் அவர்கள், பாராட்டுப் பத்திரம் மற்றும் ₹1,000 ரொக்கப் பரிசு வழங்கி கௌரவிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.