நீலகிரி மாவட்டத்தில் உள்ள இத்தலார் பகுதியில் ஜெயப்பிரகாஷ்(34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு புவனா(28) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு 4 வயதுடைய தியா ஸ்ரீ என்ற மகள் உள்ளார். அவர்களது வீட்டில் உறவினர்களான சாந்தா(59), ஈஸ்வரி(57) ஆகியோர் தங்கி இருந்தனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கடும் குளிர் காரணமாக ஜெயப்பிரகாஷ் அடுப்பில் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தார். மறுநாள் காலை வீட்டில் இருந்து புகை வந்ததால் அக்கம் பக்கத்தினர் கதவை தட்டினர். ஆனால் யாரும் கதவை திறக்கவில்லை.

இதனால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அனைவரும் மயங்கி நிலையில் இருந்ததால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மயங்கி கிடந்த குடும்பத்தினரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு ஜெயப்பிரகாஷை பரிசோதனை செய்த டாக்டர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மற்ற நான்கு பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.