திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. இந்த லட்டினை கோவிலுக்கு வரும் பக்தர்கள் வாங்கி செல்வது வழக்கமாகும். இதனை தேவஸ்தான நிர்வாகம் பிளாஸ்டிக் பைகள், பேப்பர் பைகள், மற்றும் துணிப்பைகள் போன்றவற்றில் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் தேவஸ்தான நிர்வாகம் இனி பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வாங்கி செல்வதற்காக ஓலை பெட்டிகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது தென்னை ஓலை, பனை ஓலை போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட ஓலை பெட்டிகளை கவுண்டர்கள் அமைத்து பக்தர்களுக்கு விற்பனை செய்ய தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.

இந்த ஓலை பெட்டிகள் 10 ரூபாய், 15 ரூபாய் மற்றும் 20 ரூபாய் போன்ற விலைகளில், மூன்று அளவுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இது போன்ற ஓலை பெட்டிகளை பக்தர்கள் வாங்கி செல்ல விற்பனை செய்யவும் தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளதாக நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இந்த ஓலை பெட்டிகளை வழங்குவதன் மூலமாக சுற்றுச்சூழல் காப்பாற்றப்படும் எனவும் கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.