பாலியல் குற்றவாளியான மறைந்த ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான வழக்கில், அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள புதிய ஆவணங்கள் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இதில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், எலான் மஸ்க் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

தற்போது வெளியாகியுள்ள ‘எப்ஸ்டீன் கோப்புகளில்’ (Epstein Files), எப்ஸ்டீனின் முன்னாள் தோழியான ஈவா ஆண்டர்சன்-டுபின் 2010-ஆம் ஆண்டு அனுப்பிய மின்னஞ்சல் ஒன்று விவாதப் பொருளாகியுள்ளது. எப்ஸ்டீன் தனது குற்றங்களுக்காக 2008-ஆம் ஆண்டு சிறை தண்டனை பெற்று வெளிவந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மின்னஞ்சல் பரிமாற்றம் நடந்துள்ளது.

ஈவா தனது மின்னஞ்சலில், “அடுத்த வாரம் எங்களைப் பார்க்க வாருங்கள், எனது மகள் செலின் மற்றும் அவரது 5 தோழிகள் வீட்டில் இருப்பார்கள்” என்று எப்ஸ்டீனை அழைத்துள்ளார். அப்போது அவரது மகளுக்கு 15 வயது மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

ஈவா ஆண்டர்சன்-டுபின் 1980-களில் எப்ஸ்டீனுடன் பழகியவர். 1980-இல் ‘மிஸ் ஸ்வீடன்’ பட்டம் வென்ற இவர், பின்னர் கோடீஸ்வரரான கிளென் டுபினை மணந்து கொண்டார். எப்ஸ்டீன் ஒரு பாலியல் குற்றவாளியாகப் பதிவு செய்யப்பட்ட பிறகும், ஈவாவும் அவரது கணவரும் எப்ஸ்டீனைத் தொடர்ந்து தங்களது சமூக வட்டத்தில் அனுமதித்துள்ளனர்.

கடந்த  2009-ஆம் ஆண்டு எப்ஸ்டீனின் நன்னடத்தை அலுவலருக்கு ஈவா எழுதிய கடிதத்தில், “எப்ஸ்டீன் எனது குழந்தைகளுடன் இருப்பதை நான் 100 சதவீதம் பாதுகாப்பாக உணருகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு  இந்த ஆவணங்களில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் மற்றும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட பல அதிகாரமிக்க நபர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. எப்ஸ்டீனின் குற்றப் பின்னணி தெரிந்த பிறகும் அவருடன் உலகப் புகழ்பெற்ற நபர்கள் தொடர்பில் இருந்தது ஏன் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

மேலும்  ஏற்கனவே தற்கொலை செய்துகொண்ட எப்ஸ்டீனின் பாலியல் கடத்தல் நெட்வொர்க் குறித்த விசாரணையில், இந்த புதிய ஆவணங்கள் மேலும் பல உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.