அசாம் மாநிலம் ஜோர்ஹாட்டில், தனது மகனின் பள்ளித் தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொண்டு திரும்பிய 35 வயது தந்தை, பள்ளி வளாகத்திலேயே மாரடைப்பால் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

அதாவது  தீபங்கர் போர்டோலோய் (35), அசாம் அரசு நீர்ப்பாசனத் துறையில் நிர்வாகப் பொறியாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த வியாழக்கிழமை (ஜனவரி 15), தனது மகன் பயிலும் ‘சாம்ஃபோர்ட்’ பள்ளிக்கு UKG வகுப்புத் தேர்வு முடிவுகளை வாங்குவதற்காக அவர் விடுமுறை எடுத்துச் சென்றிருந்தார்.

தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியுடன் பள்ளியின் வரவேற்பு அறையைக் கடந்து வெளியேற முயன்றபோது, திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. நிலைதடுமாறிய அவர், எதையாவது பிடித்துச் சமாளிக்க முயன்றபோது கீழே விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மறைந்த தீபங்கர் போர்டோலோய்க்கு பெரிய அளவில் உடல்நலப் பாதிப்புகள் ஏதும் இருந்ததில்லை என்றும், அவர் மிகவும் ஆரோக்கியமாகவே இருந்தார் என்றும் அவரது குடும்பத்தினர் கண்ணீருடன் தெரிவித்தனர். அவருக்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இந்தத் திடீர் இழப்பால் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஆழ்ந்த அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

சமீபகாலமாக இளைஞர்களிடையே மாரடைப்பு காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 11 அன்று, பிரபல பாடகர் பிரசாந்த் தமாங் (43) டெல்லியில் மாரடைப்பால் காலமானார். வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வாலின் மகன் அக்னிவேஷ் அகர்வால் (49) சமீபத்தில் நியூயார்க்கில் மாரடைப்பால் உயிரிழந்தார். மேலும் வயது வித்தியாசம் இன்றி ஆரோக்கியமாக இருப்பவர்களையும் மாரடைப்பு தாக்கும் இச்சம்பவங்கள், மருத்துவ உலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.