மத்தியப் பிரதேச மாநிலம் போபால் நகரில் நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவில் ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஹுராவலி சாலையில் ஹர்கியான் சௌஹான் என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் நின்று கொண்டிருந்தபோது, கார் ஒன்றில் வந்த சிலருக்கும் இவருக்கும் இடையே சாலையில் நிற்பது குறித்து சிறிய சண்டை ஏற்பட்டுள்ளது. இந்தச் சண்டை முற்றிப்போக, அந்தக் கும்பல் ஹர்கியானை தடி மற்றும் கம்பிகளைப் பயன்படுத்தி சரமாரியாகத் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.

தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில், அவர்கள் தப்பிச் செல்லும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன. ​தாக்குதலில் படுகாயமடைந்த ஹர்கியானின் நண்பர்கள், அவரது தந்தை லக்ஷ்மண் சௌஹானுக்கு வீடியோ கால் மூலம் மகனின் மோசமான நிலையைப் பற்றித் தெரிவித்துள்ளனர். மகனின் காயங்களைப் பார்த்த லக்ஷ்மண் சௌஹான் கடும் அதிர்ச்சி அடைந்தார். மகனைப் பார்க்க வீட்டிலிருந்து கிளம்பும்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், உடனடியாக அவர் சரிந்து விழுந்ததாகவும் குடும்பத்தினர் கூறினர்.

அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, மருத்துவர்கள் அவரை இறந்துவிட்டதாக அறிவித்தனர். சாலையில் ஏற்பட்ட ஒரு சிறிய தகராறால் மகன் தாக்கப்பட்டதைக் கண்ட அதிர்ச்சியில் தந்தையின் உயிர் பிரிந்த இந்தச் சம்பவம் குறித்து, போலீஸார் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு குற்றவாளிகளை அடையாளம் கண்டு விரைவில் கைது செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.