சத்தீஸ்கர் மாநிலம் பென்ட்ரா மாவட்டத்தில், திருமணமான ஆணுடன் ஓடிச் சென்றதாகக் கூறி, 35 வயது விதவைப் பெண் ஒருவரை ஒரு கும்பல் அரை நிர்வாணப்படுத்தி, ஊர் முழுவதும் ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது 35 வயது பெண், கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு தனது கணவரை இழந்தவர். இவருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த திருமணமான ஹரி பிரசாத் ரத்தோர் (35) என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இதன் காரணமாக, இருவரும் கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி கிராமத்தை விட்டு வெளியேறி, மத்தியப் பிரதேசத்தில் வசித்து வந்தனர்.
पेंड्रा: विधवा महिला को अर्ध नग्न कर गांव में घुमाया, विधवा महिला शादीशुदा शख्स के साथ भागी थी #Chhattisgarh #CGNews #Pendra #CrimeNews @CG_Police
— IBC24 News (@IBC24News) January 25, 2026
கடந்த வெள்ளிக்கிழமை இருவரும் மீண்டும் கிராமத்திற்குத் திரும்பினர். இது தொடர்பாகக் காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடந்தபோது, அந்தப் பெண் காதலனுடன் வாழ விரும்புவதாகத் தெரிவித்தார். அன்று இரவு இருவரும் கிராமத்தில் உள்ள ஒருவரது வீட்டில் தங்கியிருந்தனர்.
சனிக்கிழமை காலை 10 மணியளவில், ஹரி பிரசாத்தின் மனைவி சரோஜ் ரத்தோர், அவரது சகோதரர் மனோஜ் மற்றும் யசோதா ரத்தோர் உள்ளிட்ட கும்பல் அங்கு புகுந்தது. அவர்கள் அந்தப் பெண்ணை சரமாரியாகத் தாக்கி, அவரது ஆடைகளைக் களைந்து அரை நிர்வாணப்படுத்தினர். மேலும், அவர் உடல் முழுவதும் சாணத்தைப் பூசி, கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாகக் காளி கோயில் வரை ஊர்வலமாக இழுத்துச் சென்றனர்.
இந்தக் கொடூரத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்களும் பெண்ணின் உறவினர்களும், அந்த கும்பலிடம் இருந்து பெண்ணை மீட்டனர். அவருக்குப் புதிய ஆடைகளை வழங்கியதோடு, உடனடியாகப் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காயமடைந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பெண்ணைத் தாக்கி அவமானப்படுத்திய புகாரில் ஹரி பிரசாத்தின் மனைவி உட்பட மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
