மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் குமாரி சந்திரகாந்தா ஜெதனி. அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்த இவர், தற்போது உடல்நிலை மோசமடைந்து உயிரிழக்கும் வரை தொடரும் வலியில் தவிக்கிறார். கடந்த காலத்தில் ஒரு தவறான மருத்துவ சிகிச்சையின் காரணமாக அவரது உடல் உறுப்புகள் செயலிழந்து, இயல்பான வாழ்க்கை முறையை தொடர்ந்து நடத்த முடியாத நிலையில் உள்ளார். தொடர்ந்து உடல் வலி அதிகரித்து வருவதால், தற்போது அவர் ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் ‘கருணை கொலை’க்கு அனுமதி வழங்குமாறு ஒரு உருக்கமான வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

உடல் முழுவதும் வலி மற்றும் செயல் இழப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சந்திரகாந்தா, சமூக நலன் கண்ணோட்டத்தில் வாழ்ந்து வரும் ஒருவர். தனது சொத்துகளை பள்ளி மாணவ மாணவியரின் நலனுக்காக நன்கொடையாக வழங்கியுள்ளார். மேலும், தன்னுடைய உடல் உறுப்புகளையும் எம்.ஜி.எம். மருத்துவக் கல்லூரிக்கு உறுப்பு தானமாக ஒப்படைத்துள்ளார். தன்னுடைய உறுப்புகள் இன்னொரு உயிரை காப்பாற்றும் வகையில் பயன்பட்டால், யாருக்கேனும் பார்வை கிடைத்து விட்டாலோ அல்லது ஒருவருடைய உயிர் காப்பாற்றப்பட்டாலோ அவை கோஹினூர் வைரத்திற்கும் மேலான மதிப்பு மிக்கவை என   அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி முர்முவுக்கு அனுப்பியுள்ள மனுவில், “நான் தற்கொலை செய்ய மாட்டேன். ஏனெனில், என் மாணவ மாணவியரிடம் நான் எப்போதும் தைரியமாக வாழ வேண்டும் என்று போதித்து வந்தேன். ஆனால், என் உடல் இன்று எனக்கு ஒத்துழைக்கவில்லை. தினமும் நான் கடும் வலியில் தவிக்கிறேன். எனவே, கண்ணியமான இறப்புக்கான உரிமையை எனக்கு வழங்குங்கள்” என தெரிவித்துள்ளார்.

இவரது மனம் நெகிழ வைக்கும் வேண்டுகோள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. எனினும், இந்திய சட்டத்தின் கீழ் கருணை கொலை (Euthanasia) சட்டபூர்வமாக அனுமதிக்கப்படவில்லை. இது தற்போதைய சட்டங்களின் கீழ் சட்டவிரோதமாகக் கருதப்படுகிறது. சந்திரகாந்தா ஜெதனியின் நிலை அரசியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் ஒரு புதிய சிந்தனைக்குரிய நிலையை ஏற்படுத்தியுள்ளது.