தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை இன்று காலை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. வ உ சி துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். இதனைத்தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நெல்லை வந்த பிரதமர் மோடி, பாளையங்கோட்டை ஜான்ஸ் பள்ளி மைதானத்தில் தரையிறங்கினார். இங்கிருந்து பாஜக பொதுக்கூட்ட மேடைக்கு கார் மூலம் சென்றார். இதனையடுத்து நெல்லை பாளையங்கோட்டையில் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது, தமிழக மக்கள் பாஜக மீது வைத்துள்ள நம்பிக்கையை நாங்கள் காப்பாற்றுவோம். திருநெல்வேலி அல்வா போலவே நெல்லை மக்களும் மிகவும் இனிமையானவர்கள். நெல்லையப்பர் காந்திமதி அம்மனுக்கு எனது நமஸ்காரங்கள். நாட்டுக்காக உழைக்க நெல்லையப்பர் காந்திமதி அம்மன் நல்லாசி தர வேண்டும்.

தமிழக மக்கள் பாஜக மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளார்கள் தமிழக மக்களின் நம்பிக்கையை வெல்லும் வகையில் செயல்படுவேன். இது மோடியின் உத்தரவாதம். பாஜகவின் சமூக நீதி, நேர்மையான அரசியலை தமிழக மக்கள் கவனித்து வருகிறார்கள். தமிழகத்தில் குழந்தைகள் தொடங்கிய அனைவரும் பாஜக மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர். தமிழக மக்கள் பாஜக அரசு மீது வைத்துள்ள நம்பிக்கையை எப்போதும் காப்பாற்றுவேன் என உறுதி அளிக்கிறேன். தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் தமிழக மக்கள் வருங்காலத்தைப் பற்றிய தெளிவுடன் இருப்பவர்கள்.தமிழ்நாட்டு மக்கள் வருங்காலம் எதிர்காலத்தைப் பற்றி மிகவும் தெளிவாக இருப்பார்கள்.

புதிய சிந்தனையோடு இந்தியாவோடு சேர்ந்து தமிழகமும் சிந்திக்கிறது. நிலையான வளர்ச்சியை நோக்கிய மாற்றம் இந்தியாவில் ஏற்பட்டு வருகிறது. பாஜக ஆட்சியில் டெல்லிக்கு மிக அருகில் தமிழ்நாடு வந்துவிட்டது. மத்திய அரசால் வெளிநாடுகளில் உள்ள தமிழர்களுக்கு பெருமை அதிகரித்துள்ளது.

மத்திய அரசின் திட்டத்தால் குக் கிராமங்களுக்கும் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று நாடு 100 அடி முன்னேறினால் தமிழகமும் மிக வேகமாக 100 அடி முன்னேறும் என உத்தரவாதம் அளிக்கிறேன். தமிழகத்தின் மூலை  முடுக்குகளுக்கெல்லாம் மத்திய அரசின் திட்டங்கள் சென்றுள்ளன. உஜ்வாலா திட்டம் மூலம் பெண்களுக்கு நன்மை கிடைத்ததால் தான் நான் செல்லும் இடமெல்லாம் பெண்கள் மிகுந்த வரவேற்பு கொடுக்கிறார்கள். உஜ்வாலா எரிவாயு திட்டத்தின் மூலம் 40 லட்சம் மகளிர்க்கு எரிவாயு சிலிண்டர் இணைப்பு கிடைத்துள்ளது.

தமிழகத்தை சேர்ந்த பட்டியல் இனத்தை சேர்ந்தவரை எனது அமைச்சரவையில் வைத்துள்ளேன். தமிழகத்திலிருந்து நாங்கள் ஒருவரை நாடாளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளோம் என எல். முருகனை குறிப்பிட்டு பேசினார். 5 ஆண்டுகளுக்கு முன் 21 லட்சம் குடும்பங்கள் குழாய் மூலம் குடிநீர் பெற்றது. ஆனால் தற்போது ஒரு கோடி குடும்பத்திற்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை அரசிடமிருந்து ஏராளமான தமிழக மீனவர்களை மீட்டுக் கொண்டு வந்துள்ளோம். பாகிஸ்தானிடமிருந்து பைலட் அபிநந்தனை பத்திரமாக மீட்டுக் கொண்டு வந்தது பாஜக அரசு. திமுகவும், காங்கிரசும் இணைந்து நாட்டை பிளவுபடுத்த முயல்கின்றன. மக்களின் விருப்பத்திற்கு எதிராக செயல்படும் மாநில அரசிடம் கணக்கு கேட்க வேண்டிய நேரம் இது. நாடாளுமன்றத்தில் ராமர் கோயில் விவாதத்தின் போது திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு தராத ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. திமுகவும் காங்கிரசும் அப்புறப்படுத்த வேண்டிய கட்சிகள். மத்திய அரசு என்ன செய்தாலும் குறை கூறும் மாநில அரசின் தடைகளுக்கு மத்தியில் மக்கள் நல பணிகளை நாங்கள் செய்கிறோம். தமிழகத்தை ஆளும் மாநில அரசு வெறுப்பு அரசியலை பரப்புகிறது” என தெரிவித்தார்.