மத்திய அரசின் ‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்தின்கீழ் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் கட்டப்பட்ட ஒரு தண்ணீர்த் தொட்டி, திறப்பு விழா காண்பதற்கு முன்பே ‘கண்ணீர்’ வடிக்கத் தொடங்கியுள்ளது. மஹோபா மாவட்டத்தின் நகாரா டாங் கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட்ட இந்தத் தொட்டியில், முதல்முறையாகத் தண்ணீரை நிரப்பியபோது, அதன் சுவர்களில் பிளவுகள் ஏற்பட்டு தண்ணீர் அருவி போலக் கொட்டியது. தரமற்ற கட்டுமானப் பொருட்களால் இந்த அவலம் நேரிட்டுள்ளதாகக் கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

​இந்தத் திட்டத்திற்காக மத்திய அரசு பட்ஜெட்டில் சுமார் 67,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ள நிலையில், களத்தில் அதிகாரிகளும் ஒப்பந்ததாரர்களும் சேர்ந்து பணத்தைச் சுருட்டியுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. “பாதி கிராமத்திற்குத் தண்ணீரே வரவில்லை, குழாய்கள் வெறும் காட்சிப் பொருளாகவே உள்ளன” என்று கிராம மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர். கிராமத் தலைவர் இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார். ஏற்கனவே பாஜக எம்.எல்.ஏ ஒருவரே இந்தத் திட்டத்தில் முறைகேடு நடப்பதாக அமைச்சரின் காரை மறித்துப் புகார் அளித்த நிலையில், தற்போது இந்தச் சம்பவம் அந்தப் புகாரை ஊர்ஜிதப்படுத்தியுள்ளது.