
தர்மபுரி மாவட்டம் கீழ் ராஜா தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன்(52). விவசாயியான இவர் கோழிப்பண்ணை நடத்தி வந்துள்ளார். இவர் அவரது உறவினர் ஒருவரிடம் நிலப் பத்திரத்தை அடமானம் வைத்துள்ளார்.
எனவே அதனை மீட்டுத் தரக் கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கடந்த 4- ம் தேதி மனு அளித்துள்ளார். சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜெயராமன் மனு அளித்த பின்பு தனது உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் ஜெயராமனை காப்பாற்ற முயற்சி செய்தனர். இருப்பினும் ஜெயராமன் உடல் முழுவதும் கருகியது. பின்பு உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜெயராமனை மீட்டு போலீசார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி ஜெயராமன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.