பிபிஎல் 2025-26 தொடரில் இன்று நடந்த அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் இடையிலான போட்டியில் ஒரு நெகிழ்ச்சியான மற்றும் பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது. அடிலெய்ட் அணிக்காக அறிமுகமான இந்திய வம்சாவளி வீரர் ஜெர்சிஸ் வாடியா, வீசிய முதல் ஓவரிலேயே அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார். மூன்றாவது விக்கெட்டாக முகமது ரிஸ்வான் கொடுத்த மிக எளிதான கேட்ச்சை, பாகிஸ்தான் சக வீரரான ஹசன் அலி கோட்டை விட்டார். இதனால் வாடியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ஹேட்ரிக்’ வாய்ப்பு கைநழுவிப்போனது ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

​வாடியா வீசிய அந்தப் பந்தை ரிஸ்வான் அடிக்க முயல, அது நேராக மிட்-ஆஃப் திசையில் நின்ற ஹசன் அலியிடம் சென்றது. ஆனால் அவர் அதைத் தவறவிட, ரிஸ்வான் ஒரு ரன் எடுத்து உயிர் பிழைத்தார். இருப்பினும், ரிஸ்வானால் அதிக நேரம் களத்தில் நிற்க முடியவில்லை. 17 ரன்கள் எடுத்திருந்தபோது ஹென்றி தோர்ன்டன் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ரிஸ்வான் அவுட்டானார். ஒருவழியாக மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 16.5 ஓவர்களில் 99 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியுள்ளது.