“மும்ப்ரா பகுதியை முழுமையாகப் பசுமையாக்குவேன்” என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மும்ப்ரா பகுதி AIMIM பெண் கவுன்சிலர் சஹார் ஷேக், தனது கருத்துக்கு எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கோரியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவருக்கு எதிரான புகாரை ஏற்பதாக பா.ஜ.க. மூத்த தலைவர் கிரித் சோமையா தெரிவித்துள்ளார்.

தானே மும்ப்ரா மாநகராட்சித் தேர்தலில் AIMIM கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 22 வயதான இளம் பெண் சஹார் ஷேக், தனது வெற்றி உரையின் போது “மும்ப்ரா முழுவதையும் பசுமையாக்குவேன்” என்று குறிப்பிட்டிருந்தார். இது மத ரீதியான உள்நோக்கம் கொண்டது என்றும், இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும் கூறி பா.ஜ.க.வின் கிரித் சோமையா மும்ப்ரா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீஸ் விசாரணைக்கு ஆஜரான சஹார் ஷேக், மும்ப்ரா காவல்துறையிடம் மன்னிப்பு கடிதம் ஒன்றைச் சமர்ப்பித்தார். அதில், “எனது கருத்து கட்சியின் நிறமான பச்சையைக் குறிப்பதே தவிர, வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. எனது பேச்சால் யாருடைய மனமாவது புண்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மூவர்ணக் கொடிக்காக உயிரையும் விடத் தயாராக இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இன்று மும்ப்ரா காவல் நிலையத்திற்குச் சென்ற கிரித் சோமையாவிடம், போலீஸ் தரப்பில் இந்த மன்னிப்பு கடிதம் காட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சோமையா:

“சஹார் ஷேக் ஒரு இளம் பெண். அவர் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டுவிட்டதால், அதனை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். இருப்பினும், AIMIM கட்சி இளைஞர்களை அடிப்படைவாதிகளாக மாற்ற முயற்சிக்கிறது. இது ஒரு ‘புதிய முஸ்லிம் லீக்’ போலச் செயல்படுகிறது,” என்று விமர்சித்தார்.

இது குறித்து மூத்த காவல் ஆய்வாளர் அனில் ஷிண்டே கூறுகையில், “சஹார் ஷேக் மீது பிரிவு 168-ன் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. தற்போது அவர் மன்னிப்பு கடிதம் வழங்கியுள்ளார். அவருக்கு எழுத்துப்பூர்வமான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,” என்றார்.

தொடர்ந்து பேசிய கிரித் சோமையா, “மாலேகான், மான்குர்டு போன்ற பகுதிகளைத் தொடர்ந்து மும்பையையும் மாற்ற முயலும் அடிப்படைவாதிகளின் முயற்சி வெற்றி பெறாது. பிரதமர் மோடியின் திட்டங்கள் ஜாதி, மத வேறுபாடின்றி அனைவருக்கும் சென்றடைகிறது. இதுபோன்ற அடிப்படைவாத சக்திகளுக்கு எதிராக ஃபட்னாவிஸ் அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும்,” எனத் தெரிவித்தார்.