16-வது IPL கிரிக்கெட் திருவிழா இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில், 10 அணிகள் கலந்துகொண்டன. லீக் சுற்று முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த குஜராத் டைட்டன்ஸ் (20 புள்ளி), சென்னை சூப்பர் கிங்ஸ்(17 புள்ளி), லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்(17 புள்ளி), மும்பை இந்தியன்ஸ் (16 புள்ளி) போன்ற அணிகள் பிளே-ஆப் சுற்றை எட்டியது. முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ் போன்ற 6 அணிகள் வெளியேறியது.

இந்நிலையில் புள்ளிப் பட்டியலில் டாப்-2 இடங்களை பிடித்த அணிகளான நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்சும் இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் இன்றிரவு (மே 23) மோதுகிறது. இந்த போட்டி சேப்பாக்கத்திலுள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் அரங்கேறுகிறது. இதில் வெற்றியடையும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்குள் நுழையும். தோற்கும் அணிக்கு மற்றொரு வாய்ப்பாக வெளியேற்றுதல் சுற்றில் ஜெயிக்கும் அணியுடன் 2வது தகுதி சுற்றில் விளையாட வேண்டும்.