மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் மாநகராட்சிக் கூட்டத்தில் ‘வந்தே மாதரம்’ பாட மறுத்த காங்கிரஸ் பெண் கவுன்சிலர்களின் செயலால் பெரும் அரசியல் சர்ச்சை வெடித்துள்ளது. இது தியாகிகளை இழிவுபடுத்தும் செயல் என பாஜக சாடியுள்ளது. இந்தூர் மாநகராட்சியில் கடந்த புதன்கிழமை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. கூட்டத்தின் தொடக்கமாக தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடப்பட்டது. அப்போது காங்கிரஸ் கவுன்சிலர்களான பவுசியா ஷேக் ஆலிம் மற்றும் ருபினா இக்பால் ஆகியோர் அந்தப் பாடலைப் பாட மறுத்தனர்.

பாடல் கட்டாயம் என எந்த விதியில் உள்ளது என்று பவுசியா கேள்வி எழுப்பியதால், பாஜக கவுன்சிலர்கள் கடும் ஆத்திரமடைந்தனர். அவையில் கூச்சல் குழப்பம் நிலவியதைத் தொடர்ந்து, அவைத் தலைவர் முன்னாலால் யாதவ், பவுசியாவை அவையிலிருந்து வெளியேற உத்தரவிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ருபினா இக்பால், “யாருடைய மிரட்டலுக்கும் நாங்கள் பணிய மாட்டோம். இஸ்லாமிய நம்பிக்கையின்படி வந்தே மாதரம் பாடுவது தடை செய்யப்பட்டுள்ளது. நாங்கள் தேசிய கீதம் மற்றும் இதர தேசபக்தி பாடல்களைப் பாடுகிறோம். நாட்டின் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால், கட்டாயமாகத் திணிக்கப்படுவதைப் பின்பற்ற முடியாது” எனத் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் ஹேமந்த் கண்டேல்வால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேயர் புஷ்யமித்ரா பார்கவ் கூறுகையில், சம்பந்தப்பட்ட கவுன்சிலர்களுக்கு காங்கிரஸ் கட்சி நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றார். பாஜக தரப்பில் இவர்கள் மீது எஃப்ஐஆர் (FIR) பதிவு செய்யவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, ருபினாவை கட்சியிலிருந்து நீக்க இந்தூர் காங்கிரஸ் கமிட்டி மாநிலக் குழுவிற்குப் பரிந்துரை செய்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து தேசியவாத காங்கிரஸ் (SP) முன்னாள் எம்.பி. பவுசியா கான் கூறுகையில், “அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மத சுதந்திரத்தின் அடிப்படையில் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. நானும் அங்கிருந்திருந்தால் பாட மாட்டேன், ஆனால் மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றிருப்பேன். பவுசியா ஷேக் அவையிலிருந்து வெளியேறியது தவறான முடிவு; அவர் அங்கேயே நின்று தேசத்தின் மீதான மரியாதையை வெளிப்படுத்தியிருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.