இந்தோனேசியாவின் பாலி தீவில் மதுபோதையில் பெண்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட ரஷ்ய நாட்டுச் சுற்றுலாப் பயணியை, உள்ளூர் குத்துச்சண்டை வீரர் ஒருவர் கழுத்தை நெரித்துப் பிடித்து பாடம் புகட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலியின் உலுவாட்டு கடற்கரைப் பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள ஒரு கேளிக்கை விடுதிக்கு வந்த ரஷ்ய சுற்றுலாப் பயணி ஒருவர், அதிகப்படியாக மது அருந்திவிட்டு போதையில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்துள்ளார். சாலையில் சென்ற வாகனங்களை மறிப்பது, அவ்வழியே சென்ற பெண்களை அனுமதியின்றி தொடுவது என அவரது அத்துமீறல் எல்லை மீறியுள்ளது.
அங்கிருந்த பெண்கள் சிலரிடம் அவர் அநாகரிகமாக நடக்க முயன்றபோது, பெல்டா பிரிக் சாண்டோ என்ற உள்ளூர் குத்துச்சண்டை வீரர் மற்றும் உடற்பயிற்சி கூட உரிமையாளர் தலையிட்டார். அந்தப் பயணியை அடிக்காமல், பின்னால் இருந்து அவரது கழுத்தை நெரித்துப் பிடித்து தரையில் சாய்த்தார்.
வைரலான வீடியோவில், அந்தப் பயணி பிடியில் இருந்து விடுபடப் போராடுவதும், ஒரு கட்டத்தில் மூச்சுத்திணறி மயக்கமடைவதும் தெரிகிறது. அருகில் இருந்தவர்கள் “அவர் மயங்கிவிட்டார், விட்டுவிடுங்கள்” எனக் கத்திய பிறகு, சாண்டோ பிடியைத் தளர்வு செய்தார். சிறிது நேரத்தில் உணர்வு திரும்பிய அந்தப் பயணி, “நான் புரிந்துகொண்டேன்” எனத் தழுதழுத்த குரலில் கூறினார்.
இதுகுறித்து சாண்டோ கூறுகையில், “அவரை அடிக்க எனக்கு விருப்பமில்லை. ஆனால் உள்ளூர் மக்களுக்கும், பெண்களுக்கும் அவர் கொடுத்த தொல்லைக்கு ஒரு பாடம் புகட்டவே இப்படிச் செய்தேன். பாலிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இங்கிருக்கும் கலாசாரத்தையும் மக்களையும் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்” என்றார். பின்னர் தனது செயலுக்குச் சிறு மன்னிப்புக் கோரிய அவர், அதே சமயம் மரியாதையுடன் நடக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
View this post on Instagram
பாலியில் சமீபகாலமாகச் சுற்றுலாப் பயணிகளின் அநாகரிகமான செயல்பாடுகள் அதிகரித்து வருகின்றன. கடந்த மார்ச் 19-ஆம் தேதி, பாலியின் புனிதமான ‘நிேபி’ (Nyepi – அமைதி நாள்) அன்று தடையை மீறி வெளியில் சுற்றித் திரிந்த அமெரிக்கப் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டார். குட்டா பகுதியில் சுற்றுலாப் பயணிகள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்ட சம்பவமும் அண்மையில் நிகழ்ந்தது. மேலும் சுற்றுலாப் பயணிகளின் இத்தகைய அத்துமீறல்களைக் கட்டுப்படுத்த, பாலி மாகாண அரசு 2025-ஆம் ஆண்டு முதல் புதிய நடத்தை விதிகளை அமல்படுத்தியுள்ளது. உள்ளூர் கலாசாரம் மற்றும் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
