சீன நாட்டின் ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில், வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை திடீரென மயங்கி விழுந்ததும், பதற்றமடைந்த மாணவர்கள் அவருக்காகக் கண்ணீர் விட்டு அழுத நெகிழ்ச்சியான காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நேற்று காலை வழக்கம்போல் வகுப்பறையில் ஆசிரியை பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். அவருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்ததாலும் (Low Blood Sugar), மாதவிடாய் கால உடல் உபாதைகளாலும் கடும் சோர்வு ஏற்பட்டுள்ளது. மேலும், அன்று காலை முதல் தொடர்ந்து ஆறு வகுப்புகளை அவர் கவனித்து வந்ததால், உடல்நிலை மிகவும் மோசமடைந்தது.

ஒரு கட்டத்தில் நிலைகுலைந்த அவர், வகுப்பறையை விட்டு வெளியேற முயன்றபோது நிலைகுலைந்து சரிந்தார். இதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த மாணவர்கள், இருக்கையை விட்டு ஓடி வந்து ஆசிரியையைத் தாங்கிப் பிடித்தனர்.

 

இந்தச் சம்பவம் குறித்து பின்னர் ஆசிரியை கூறுகையில், “மயங்கி விழுந்த என்னைப் பார்த்த மாணவர்கள், நான் இறந்துவிட்டதாக நினைத்து கதறி அழத் தொடங்கிவிட்டனர். தலைமை ஆசிரியர் சம்பவ இடத்திற்கு வந்தபோது, மாணவர்கள் என்னைச் சூழ்ந்து அழுது கொண்டிருந்தனர். இன்னும் சில மாணவர்கள் நான் உயிர் பிழைக்க வேண்டும் என்று மண்டியிட்டு கடவுளிடம் வேண்டியதைக் கண்டு நெகிழ்ந்து போனேன்,” என உருக்கமாகத் தெரிவித்தார். மேலும் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையிலான இந்த உன்னதமான அன்பைப் காட்டும் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் பலரது பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.