திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில் “எங்கள் முதல்வர் எங்கள் பெருமை” எனும் தலைப்பில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை வரலாறு புகைப்படம் கண்காட்சி நடைபெறுகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக இக்கண்காட்சியை திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என் நேரு ஏற்பாடு செய்து இருந்தார்.

இந்த புகைப்பட கண்காட்சியை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் திரைப்பட நடிகர் பிரபு திறந்து வைத்து பார்வையிட்டார். அதன்பின் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் என பலர் இக்கண்காட்சியை பார்வையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் முதல்வரின் புகைப்படம் கண்காட்சியை பார்வையிட்டு உள்ளார். அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியதாவது, முதல்வர் ஸ்டாலினின் இக்கண்காட்சியை பார்க்க வந்ததில் எனக்கு மகிழ்ச்சி. எவ்வளவு பெரிய உயரத்தினை நாம் அடையவேண்டுமோ அதற்கு நிறைய வலிகளையும் தியாகங்களையும் தாண்டி தான் வர வேண்டும் என்பது இதை பார்க்கும்போது தெரிந்தது என கூறினார்.