தெலுங்கானாவின் மேடாரம் ஜதரா திருவிழாவின் போது, ஆந்திர மாநிலம் கர்னூலைச் சேர்ந்த ஷேக் ஷேக்ஷா வலி என்ற ஏழை வியாபாரி, யூடியூபர்களால் மிக மோசமாகத் துன்புறுத்தப்பட்ட சம்பவம் இணையத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘தேஜஸ்வி நியூஸ்’ என்ற யூடியூப் சேனலைச் சேர்ந்தவர்கள், அவர் விற்கும் 10 ரூபாய் கோவா பன்னில் ஏதோ கலப்படம் இருப்பதாகக் கூறி, அவரிடம் ஆதார் கார்டைக் கேட்டு மிரட்டியுள்ளனர். அதுமட்டுமில்லாமல், அந்த உணவில் விஷம் ஏதும் இல்லை என்பதை நிரூபிக்க, அவரை அந்தப் பன்னை கட்டாயப்படுத்தி அங்கேயே சாப்பிட வைத்துள்ளனர். ‘புட் ஜிகாத்’ என்ற பெயரில் வதந்திகளைப் பரப்பி வியூஸ்க்காக அந்த ஏழை வியாபாரியின் மானத்தை வாங்கிய அந்த யூடியூபர்களுக்கு எதிராக தற்போது ஆதரவு அலை பெருகியுள்ளது.

அந்தப் பகுதி மக்கள் மற்றும் சமூக வலைதளப் பிரபலங்கள் பலரும், அந்த வியாபாரியிடம் சென்று அவர் விற்கும் பன்னை விரும்பி சாப்பிட்டு தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

தெலுங்கு தேசம் கட்சியின் முக்கிய நிர்வாகி பரிதாலா ஸ்ரீராம் உட்பட பல அரசியல் தலைவர்களும், “உழைத்து பிழைப்பவர்களை மதம் மற்றும் சாதி ரீதியாக ஒடுக்குவது கண்டிக்கத்தக்கது” என அந்த வியாபாரிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளனர்.

மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொண்ட அந்த யூடியூபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.