இணையத்தில் ஒரு மாற்றுத்திறனாளியின் உருக்கமான வீடியோ வைரலாகி வருகிறது. இதில், அவர் ஜோமேட்டோ டி-ஷர்ட் அணிந்து, மரப்பலகை வண்டியில் உணவு ஆர்டரை விநியோகிக்கச் செல்கிறார். அவரைப் பார்த்த இரண்டு இளைஞர்கள் உடனடியாக உதவ முன்வருகின்றனர். வாழ்க்கையில் பல இன்னல்களை எதிர்கொண்டாலும், முழு அர்ப்பணிப்புடன் உழைக்கும் அந்த மாற்றுத்திறனாளியின் மன உறுதியைப் பார்த்து, அவர்கள் உதவி செய்கிறார்கள். இந்தக் காட்சி பலரின் மனதைத் தொட்டுள்ளது.

வீடியோவில், ஒரு இளைஞர் அவரிடம், “இந்த ஆர்டரை எடுத்துச் செல்ல வேண்டுமா?” என்று கேட்க, அவர், “ஆமாம், இல்லையெனில் ஆப் நிறுவனம் எனது ஐடியை முடக்கிவிடும்,” என்கிறார். இதைக் கேட்ட இளைஞர், “நீங்கள் ஆர்டர் கொண்டு செல்ல வேண்டுமெனில், எங்கள் காரில் வாருங்கள்,” என்று கூறி, அவரை ஆடி காரில் அழைத்துச் செல்கிறார். கட்டிடத்தின் வெளியே ஆர்டரை விநியோகிக்க சென்றபோது, அவர் வாடிக்கையாளரை அழைத்து, தான் மாற்றுத்திறனாளி என்பதால் மேலே வர முடியாது என்று கூறுகிறார். வாடிக்கையாளர் கீழே வந்து ஆர்டரைப் பெறுகிறார். 58 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது.