அடில் ராஜா “சோல்ஜர் ஸ்பீக்ஸ்” எனும் YouTube சேனலை நடத்தி வருகிறார். அவருக்கு சுமார் 3 லட்சம் பார்வையாளர்கள் இருக்கின்றனர். பாகிஸ்தானை சேர்ந்த நடிகை சஜல் அலியை பாகிஸ்தான் ராணுவம் “தேன் டிராப்” ஆக பயன்படுத்தியதாக யூடியூபரான அடில் ராஜா குற்றம்சாட்டியுள்ளார். இதையடுத்து தனக்கும் வேறு சில நடிகைகளுக்கும் எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியதற்காக அடில் ராஜாவை சஜல் அலி கடுமையாக சாடி உள்ளார்.

இதற்கிடையில் அடில் ராஜா வெளியிட்ட வீடியோவில், பாகிஸ்தானின் சக்திவாய்ந்த உளவு அமைப்புகள் உளவு வேலைக்கு நடிகைகளை பயன்படுத்தி இருப்பதாக தெரிவித்தார். எனினும் அவர் அந்த நடிகைகளின் பெயர்களை குறிப்பிடவில்லை. ஆனால் அவர்களின் பெயர்களின் முதல் எழுத்தை மட்டும் பயன்படுத்தியிருந்தார். மொத்தம் 4 நடிகைகளை அவர் குறிப்பிட்டிருந்தார்.

முழுப் பெயர்களுக்கு பதில் நடிகைகளின் முதலெழுத்துக்களை பகிர்ந்து கொண்டாலும், அவர் யாரைக் குறிப்பிடுகிறார் என்பது நெட்டிசன்களுக்கு தெளிவாக தெரிந்தது. சில பாகிஸ்தானிய நடிகைகள் மற்றும் மாடல்கள் அரசியல்வாதிகளை சிக்கவைப்பதற்காக ஜெனரல் (ஓய்வு) பஜ்வா மற்றும் முன்னாள் ஐஎஸ்ஐ ஹான்கோ பைஸ் ஹமீத் போன்றோருடன் கூட்டு சேர்ந்து வேலை செய்வதாக அடில் ராஜா கூறினார்.

இதுகுறித்த வீடியோ வைரலானதை அடுத்து, பாகிஸ்தான் உளவு அமைப்பு தயாரித்து வெளியிட்ட நாடகங்களில் பணியாற்றிய நடிகைகள் தான் அவர்கள் என நெட்டிசன்கள் பேச தொடங்கி இருக்கிறார்கள். வீடியோ வெளியான சிறிது நேரத்திலேயே பெரும்பாலான சமூக ஊடக பயனர்கள் மெஹ்விஷ் ஹயாத், மகிரா கான், குப்ரா கான் மற்றும் சஜல் அலி போன்றோரின் புகைபடங்களை வெளியிட்டு அவர்கள் தான் என சமூகவலைதளங்களில் பேசத் தொடங்கினர்.

இதில் நடிகை சஜல் அலி இந்த குற்றச்சாட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி “நம் நாட்டின் தரம் குறைந்திருப்பது வருத்தத்திற்குரியது மட்டுமல்ல, அருவருக்கத்தக்கது. ஒருவரின் தனி பண்புநலனை படு கொலை செய்வது, மனிதத் தன்மையின் மிக மோசமான வடிவம் ஆகும். மேலும் பெரும் பாவத்திற்குரியது ஆகும்” என தெரிவித்திருக்கிறார்.

முன்னாள் ராணுவ அதிகாரியான அடில் ராஜா புது அரசாங்கத்தை, குறிப்பாக ஷெரீப் குடும்பத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நான்கு டாப் மாடல்கள் மற்றும் நடிகைகள் முன்னாள் உயர்மட்ட அதிகாரிகளுடன் முறைகேடான உறவு வைத்திருந்ததாக கூறிய வீடியோவை அடுத்து நடிகர் குப்ரா கான் யூடியூபர் அடில் ராஜா மீது அவதூறு வழக்கு தொடரப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.