சென்னை மாவட்டம் ஓட்டேரி பகுதியை சேர்ந்த தொழிலதிபரான சார்லஸ்(50) என்பவர் அண்ணா நகரில் இருக்கும் மசாஜ் கிளப்பிற்கு சென்ற மசாஜ் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். அப்போது அங்கு ஊழியராக வேலை பார்க்கும் ஆண்ட்ரியா என்ற பெண்ணுடன் சார்லசுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 29-ஆம் தேதி ஆண்ட்ரியாவும் சார்லஸும் செல்போனில் பேசியுள்ளனர். அப்போது தனக்கு தெரிந்த ரேகா சாவித்திரி(60) என்பவர் சூளைமேட்டில் ஒரு சொகுசு விடுதியை நடத்துகிறார். அங்கு சென்றால் மசாஜ் செய்து கொள்வதோடு உல்லாசமாக இருக்கலாம் என கூறியதால் சார்லஸ் ஆசையுடன் அங்கு சென்றுள்ளார்.

அப்போது ரேகா சாவித்திரியுடன் நின்று கொண்டிருந்த 2 வாலிபர்கள் தங்களை காவலர்கள் என அறிமுகப்படுத்திக் கொண்டு சார்லஸை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் இந்த வயதில் உனக்கு ஜாலியாக இருக்கணுமா? என திட்டிக்கொண்டு சார்லஸ் அணிந்திருந்த 20 பவுன் தங்க நகைகளை பறித்துள்ளனர்.

மேலும் கூகுள் பே மூலம் 40000 பணத்தையும் அபகரித்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சார்லஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி ரேகா சாவித்திரி, நவீன் குமார் ஆகிய இருவரை கைது செய்தனர். தலைமறைவான ஆண்ட்ரியா மற்றும் இன்னொரு வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.