ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவு வர தாமதமானதால், டெலிவரி ஊழியரை ஒரு இளம்பெண் மிகக் கேவலமாகப் பேசி அசிங்கப்படுத்திய சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோல்ட் காபி மற்றும் சாண்ட்விச் ஆர்டர் செய்த அந்தப் பெண், ஒரு மணி நேரம் கழித்து வந்த ஊழியரிடம், “நீதான் என் சாண்ட்விச்சை தின்னுட்ட” என்று கூறி அநாகரீகமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உணவகத்தில் இருந்து காபி மட்டுமே வழங்கப்பட்டதாக அந்த ஊழியர் எவ்வளவோ அமைதியாக விளக்கம் அளித்தும், அந்தப் பெண் ஆத்திரத்தில் “உன் தகுதி என்னன்னு தெரியுமா?” என்று தரம் தாழ்ந்து கேட்டது காண்போரை முகம் சுளிக்க வைத்துள்ளது.

​தன்னுடைய உழைப்பையும் தகுதியையும் கொச்சைப்படுத்திய பெண்ணிடம், “எங்களுக்குப் பசி எடுத்தால் உங்கள் 144 ரூபாய் உணவைத் திருடித் தின்ன மாட்டோம்” என்று அந்த ஊழியர் மிக மென்மையாகக் கூறியும் அந்தப் பெண் அடங்கவில்லை. ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற அவர், கையில் இருந்த கோல்ட் காபியை நடுரோட்டில் தூக்கி வீசி எறிந்து ரகளையில் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோ தற்போது எக்ஸ் (X) தளத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், உழைக்கும் வர்க்கத்தினரை இப்படித் தரக்குறைவாக நடத்துவதா என்று நெட்டிசன்கள் அந்தப் பெண்ணுக்கு எதிராகக் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.