தனது குரலை வைத்து பலரும் கேலி செய்ததைக் கடந்து, இன்று பல சர்வதேச மேடைகளில் வெற்றியாளராக வலம்வரும் எழுத்தாளர் மற்றும் கல்வியாளர் தீபக் ராமோலாவின் அனுபவம் சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. தனது பலவீனத்தையே நம்பிக்கையாக மாற்றிய அவரது பயணம் பலருக்கு உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளது.
வளரும் பருவத்தில் தீபக் ராமோலா தனது குரல் குறித்து பல சங்கடங்களைச் சந்திக்க நேர்ந்துள்ளது. அவரது குரல் ஒரு சிறுவனைப் போலவோ அல்லது ஒரு பெண்ணைப் போலவோ இருப்பதாகவும், போதுமான ஆளுமைத் திறன் கொண்டதாக இல்லை என்றும் பலரும் விமர்சித்துள்ளனர். இந்தத் தொடர்ச்சியான கேலிகள் அவருக்குள்ளே ஒரு தாழ்வுமனப்பான்மையை ஏற்படுத்தியிருந்தன.
View this post on Instagram
ஒருநாள் 11-ஆம் வகுப்பு வகுப்பறையில் சக மாணவர்களின் கேலியால் மனம் உடைந்து தீபக் ராமோலா அழுதுள்ளார். இதைக் கவனித்த அவரது ஆங்கில ஆசிரியை பிரகதி கபூர் அவரை அழைத்து ஆறுதல் கூறியதுடன் ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்டார். “உனக்கு உன்னுடைய குரல் பிடிக்குமா?” என்று அவர் கேட்டார்.
அதற்குப் பிறகு, “நாளை காலை நீ பேசும் திறனை இழந்துவிட்டதாக கற்பனை செய்து பார்” என்றார் ஆசிரியை. அந்த யோசனை தீபக்கிற்குத் தன் குரலின் மதிப்பை உணர்த்தியது. உடனே ஆசிரியை, “சரி, அப்படியானால் உனக்கு உன்னுடைய குரல் பிடிக்கும். உன்னுடைய குரல் பிடித்திருந்தால், நீ உன்னுடைய குரலைச் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும், உன்னுடைய கதையை நீயே பெருமையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.
ஆசிரியரின் அந்த வார்த்தைகள் தீபக்கின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகு, தன் குரலைக் குறித்து அவர் எப்போதுமே வெட்கப்பட்டதில்லை. ஒரு காலத்தில் விமர்சனத்திற்கு உள்ளான அதே குரல்தான், இன்று அவரை உலகெங்கிலும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று சொற்பொழிவாற்றும் அளவுக்கு உயர்த்தியுள்ளது.
பலரும் தங்களின் தோற்றம், குரல் அல்லது பிற தனிப்பட்ட குணாதிசயங்களை நினைத்து மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று தயங்குகிறார்கள். ஆனால், மற்றவர்கள் எதை வெறுக்கிறார்களோ அதை மாற்றுவதில்தான் உண்மையான நம்பிக்கை இல்லை; மாறாக, நம்மை நாமே முழுமையாக ஏற்றுக்கொள்ளும்போதுதான் உண்மையான தன்னம்பிக்கை பிறக்கிறது என்பதை தீபக் ராமோலாவின் இந்த நிகழ்வு உணர்த்துகிறது.
