சீனாவின் மெக்காவ் (Macau) பகுதியில், 70 வயது மூதாட்டி ஒருவரை அச்சமூட்டியதாகக் கூறி, ஒரு நவீன ஹூமனாய்டு ரோபோவை போலீசார் தடுத்து நிறுத்திய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த வியாழக்கிழமை இரவு, ‘யூனிட்ரீ ஜி1’ (Unitree G1) வகை ரோபோ ஒன்றை அதன் உரிமையாளர் பொது இடத்தில் சோதித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த மூதாட்டி ஒருவருக்குப் பின்னால் அந்த ரோபோ திடீரென வந்து நின்றதால், அவர் கடும் அதிர்ச்சியடைந்தார்.

“உனக்கு என்ன பைத்தியமா? ஏன் இப்படி இதயத் துடிப்பை எகிற வைக்கிறாய்?” என அந்த ரோபோவைப் பார்த்து அவர் ஆவேசமாகக் கத்தியுள்ளார்.

இதனால் ஏற்பட்ட பரபரப்பைத் தொடர்ந்து, அங்கு வந்த போலீசார் அந்த ரோபோவை ‘கைது’ செய்வது போல அங்கிருந்து இழுத்துச் சென்றனர்.

விசாரணையில், அது ஒரு கல்வி மையத்தைச் சேர்ந்த ரோபோ என்பதும், மூதாட்டி வழிவிடும் வரை அவருக்குப் பின்னால் காத்திருந்ததும் தெரியவந்தது.

மூதாட்டிக்கு உடல்நலக் குறைவு ஏற்படவில்லை என்றாலும், முன்னெச்சரிக்கையாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

ரோபோவை பொது இடங்களில் பயன்படுத்தும் போது கவனமாக இருக்குமாறு அதன் உரிமையாளருக்கு போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.