பா.ரஞ்சித் டைரக்டில் விக்ரம் நடித்து வரும் தங்கலான் திரைப்படத்தின் சூட்டிங் இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது. இப்படத்தில் நடிகர் பசுபதி, நடிகை பார்வதி, மாளவிகா மோகனன் போன்றோர் முக்கியமான வேடங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் அடைந்த துயரத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட படத்தின் பிரத்யேக மேக்கிங் வீடியோ ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இதனிடையில் படப்பிடிப்புக்கான ஒத்திகை சமயத்தில் விபத்தில் சிக்கிய விக்ரமுக்கு விலா எலும்பு முறிந்ததால் சிறிதுகாலம் ஓய்வில் இருந்தார். பின் நடிகை பார்வதிக்கான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் தங்கலான் படத்தில் நடித்து வரும் பார்வதி வெளியிட்டுள்ள பதிவில் ” காதல், பணம், புகழைத் தவிர எனக்கு உண்மையை தாருங்கள். தங்கலான் திரைப்படத்தில் நான் நடிக்கும் கதாபாத்திரத்துக்காக சென்ற இடங்கள், நான் தேர்ந்தெடுத்த விஷயங்கள் அனைத்தும் எனக்குள் எழுப்பி வைத்திருந்த சுவர், முகத்திரைகளை சுக்கு நூறாக உடைத்து உள்ளது. இறுதியில் உண்மை மட்டுமே பிரதிபலித்தது. இந்த தங்கலான் என் கேரியரில் மிக முக்கியமான திருப்பத்தை கொடுக்கக்கூடிய படமாக அமைந்திருக்கிறது” என அவர் பதிவிட்டுள்ளார்.