அட்டக்கத்தி, ரம்மி, பண்னையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், காக்கா முட்டை உட்பட பல்வேறு திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவரது நடிப்பில் சில நாட்களுக்கு முன் வெளியாகிய ஃபர்ஹானா படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே ஐஸ்வர்யா ராஜேஷ், புஷ்பா திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனாவுக்கு பதில் தான் நன்றாக நடித்து இருப்பேன் என கூறியதாக செய்திகள் வெளியாகி சர்ச்சையானது.

இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனா பற்றி கூறிய கருத்துக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில், புஷ்பா திரைப்படத்தில் நடித்த நடிகை ராஷ்மிகாவின் கடின உழைப்பை நான் ஒருபோதும் குறை சொல்லவில்லை. ராஷ்மிகாவின் பணி மீது தனக்கு ஆழ்ந்த அபிமானம் மட்டும்தான் உண்டு என்பதையும் திரையுலகை சேர்ந்த சக நடிகர் நடிகைகள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்” என ஐஸ்வர்யா ராஜேஷ் குறிப்பிட்டுள்ளார்.