மத்திய அரசு இலவச சேனல்களை பார்க்க தொலைக்காட்சி பெட்டியிலே செட்டாப் பாக்ஸ் அனைத்து கருவிகளுக்குமான ஒருங்கிணைந்த சி டைப் சார்ஜர் ஒரே மாதிரியான கண்காணிப்பு கருவி போன்றவற்றிற்கு சர்வதேச தர நிர்ணயம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தற்போது இலவச மற்றும் கட்டண தொலைக்காட்சி சேனல்களை பார்க்க வேண்டும் என்றால் செட்டாப் பாக்ஸ் கருவிகளை பொருத்த வேண்டியிருக்கிறது. அதேபோல் தூர்தர்ஷன் தனது ஒளிபரப்பை எண்ம வடிவில் மட்டுமே செயல்படுத்த இருப்பதால் நாடு முழுவதும் அனைவரும் அந்த சிக்னல்களை பெரும் விதமாக இந்த புதிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இது குறித்து நுகர்வோர் விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, செட்டாப் பாக்ஸ் பொருத்திவிட்டாலே இலவச எண்ம வடிவிலான சேனல்களை பார்க்கும் விதமாக அதை உருவாக்க வேண்டும். இலவச தொலைக்காட்சி சேனல்களை செட்டாப் பாக்ஸ் பயன்படுத்தாமலும் பார்க்கும் விதமாக தொலைக்காட்சி பெட்டிகளை உருவாக்க வேண்டும். அதேபோல் கையடக்க கணினி, மடிக்கணினி, கைபேசி போன்ற பல்வேறு கருவிகளுக்கு ஒரே மாதிரியான யு.எஸ்.பி டைப், சி சார்ஜரை உருவாக்க வேண்டும். இது வெவ்வேறு சாதனங்களுக்கு வெவ்வேறு சார்ஜர்கள் இருப்பதை தடுப்பது மட்டுமல்லாமல் மின் கழிவு அதிகரிப்பதை குறைக்கிறது. மேலும் வீடியோ கண்காணிப்பு சாதனங்களை ஒரே மாதிரியான உள்ளீடுகளுடன் உருவாக்கவும் தர நிர்ணயம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.