
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் கடந்த ஆண்டில் இந்தியா சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியை வாழ்வாதார நிதி போல் அந்நாட்டுக்கு வழங்கியுள்ளது. கடந்த ஜனவரியில் இலங்கைக்கு 900 மில்லியன் டாலர் கடன் உதவியை இந்தியா அறிவித்தது. அதன்பின் 500 மில்லியன் டாலர் நிதி உதவியை எரிபொருள் வழங்குவதற்காக அறிவித்தது. இந்த கடன் பின் 700 மில்லியன் டாலராக அதிகரிக்கப்பட்டது.
இவ்வாறு இலங்கைக்கு இந்தியா தாராள உதவிகளை செய்து வருகிறது. இந்நிலையில் அங்கு பொது போக்குவரத்து சாதன வசதியை மேம்படுத்தும் விதமாக 75 பேருந்துகளை வழங்கியுள்ளது. இது குறித்து இலங்கைக்கான இந்திய தூதர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, இலங்கையில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக போக்குவரத்து வாரியத்திடம் இந்திய தூதர் 75 பேருந்துகளை வழங்கியுள்ளார். இலங்கை போலீசுக்கு கடன் உதவியாக டிசம்பர் மாதம் 125 சொகுசு வாகனங்களையும் இந்தியா வழங்கியது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.