அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில், கடந்த ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் அதை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு தொடர்பான விசாரணை பல கட்டங்களாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் நேற்று இபிஎஸ் தரப்பு வாதம் நடைபெற்றது. இதற்கு முன்பு ஓபிஎஸ் தரப்பு வாதத்தில், எம்ஜிஆர் வடிவமைத்த கட்சியின் கொள்கைகளை இபிஎஸ் தரப்பு முற்றிலும் மாற்றி அமைக்க முயற்சி செய்வதாகவும், கட்சியின் பல பிரச்சினைகளை முன்னின்று சமாளித்து கட்சிக்காக பாடுபட்ட என்னை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து சுயநலத்திற்காக இபிஎஸ் நீக்கிவிட்டார் என்றும் பல கட்டங்களாக வாதிடப்பட்டது.

அதோடு ஒன்றரை கோடி தொண்டர்களின் ஆதரவும் தனக்கு இருப்பதால் சிலரின் சுயநலத்திற்காக அதிமுக கட்சி பலியாகி விடக்கூடாது எனவும் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தொடர வேண்டும் ஓபிஎஸ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. நேற்று உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு வாதங்கள் நடைபெற்ற நிலையில் வழக்கின் விசாரணை மீண்டும் வருகிறது. இந்நிலையில் வழக்கின் தீர்ப்பு  நெருங்கி வருவதால், தலைமை பொறுப்பு யாருக்கு கிடைக்கும் என்று அது எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. மேலும் தேர்தல் ஆணையம் எடப்பாடியின் பெயரை இடைக்கால பொதுச் செயலாளர் என்று குறிப்பிட்ட நிலையில், மாநில தேர்தல் ஆணையம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு கடிதம் அனுப்பியது. இதனால் தேர்தல் ஆணையத்தின் முடிவு என்னவாக இருக்கும் என்று எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. தமிழகத்தை பலமுறை ஆட்சி செய்துள்ள அதிமுக-வில் தற்போது அதிகார மோதல் நடைபெற்று வரும் யாருக்கு பதவி கிடைக்கும் என்பது தான் தற்போது பலரது கேள்வியாகவும் இருக்கிறது.