கடந்த காலங்களில் குடும்பத்துக்குள் நடைபெறும் ஒரு சாதாரண சடங்காகக் காணப்பட்ட குழந்தைப் பெயரிடும் நிகழ்வு, தற்போது புதிய தொழில் துறையாக வளர்ந்துள்ளது. “குழந்தைப் பெயர் ஆலோசகர்” எனும் புதிய தொழில், தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி, நெட்டிசன்களை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் வசிக்கும் டெய்லர் ஏ. ஹம்ப்ரி என்ற 37 வயதுப் பெண், குழந்தைப் பெயர்கள் மீதான தனிப்பட்ட ஆர்வத்தை, ஒரு ஆடம்பரமான தொழிலாக மாற்றி, தற்போது உலகம் முழுவதும் கவனம் ஈர்த்து வருகிறார்.

முதலில் வெறும் $1,500 (அதாவது ₹1.25 லட்சம்) மட்டுமே வசூலித்த ஹம்ப்ரி, தற்போது தனது சேவைக்காக அதிகபட்சம் $30,000 (₹26 லட்சம்) வரை வசூலிக்கிறார். தற்போது அவர் 500-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ளார். வாடிக்கையாளர்களின் விருப்பம், பழக்கம், குடும்ப மரபு, நவீனத் தேவை என அனைத்தையும் மதித்து, வாடிக்கையாளர்களுக்குத் தனிப்பயனாக்கப்பட்ட பெயர்களை ஆலோசனை மூலம் பரிந்துரிக்கிறார். ஒவ்வொரு பெயரின் அர்த்தம், வரலாறு, சொற்பிறப்பு, எழுத்துப்பிழைகள், புனிதத்தன்மை, அதிர்வுகள் போன்ற அம்சங்களை ஆய்வு செய்து, அதற்கேற்ப சிந்தனைக் குழுவின் உதவியுடன் பெயர்களைத் தேர்வு செய்கிறார்.

 

பெற்றோரிடம் மின்னஞ்சல் மூலமாக ஆலோசனை அளிக்க $200 (₹17,000) எனக் குறைந்த கட்டணத்திலிருந்தாலும், VIP சேவைகள் $10,000 (₹8.5 லட்சம்) முதல் தொடங்குகின்றன. இதில் VIP சேவைகளில்: அழகிய மற்றும் அரிய பெயர்களை உருவாக்குதல், குழந்தை பெயரை தனிப்பட்ட ‘பிராண்ட்’ ஆக உருவாக்குதல், குடும்ப மரபைப் பொருத்த பெயர் தேட genealogy நிபுணர் நியமித்தல், சிந்தனைக் குழுவின் உதவியுடன் பெயர் பட்டியலை உருவாக்குதல் போன்றவை அடங்கும்.

TikTok மற்றும் Instagram போன்ற சமூக ஊடக தளங்களில், ஹம்ப்ரிக்கு 100,000-க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் உள்ளனர். இதன்மூலம் பல புதிய பெற்றோர்கள் அவரைத் தொடர்புகொண்டு ஆலோசனை பெற முன்வந்துவருகிறார்கள். இதற்கிடையே, ஐந்து குழந்தைகளின் தாயான ஒரு பெண், தாய்ப்பாலை அதிக அளவில் விற்பனை செய்து, மாதத்திற்கு $1,000 (₹87,000) வரை சம்பாதித்து வருவதாகவும் சமூக ஊடகங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றன. வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ளவும், தனிப்பட்ட சேவைகளை வழங்கவும், Facebook போன்ற தளங்களை அவர் பயன்படுத்துகிறார் என்று கூறப்படுகிறது.